அற்றவ ரென்பார் ... 365, 40, 366, 11/02/2024
- Mathivanan Dakshinamoorthi
- Feb 11, 2024
- 1 min read
11/02/2024 (1072)
அன்பிற்கினியவர்களுக்கு:
பொய்மை இல்லாதது வாய்மை. வாய்மையை விரும்பினால் தூய்மை பிறக்கும். அஃதாவது, அவாவின்மை கைக்கூடும் என்றார் குறள் 364 இல்.
இந்தக் கருத்தை உறுதி செய்யும் விதமாக அடுத்த குறளை அமைத்துள்ளார்.
அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர். – 365; - அவா அறுத்தல்
அற்றவர் என்பார் அவா அற்றார் = பற்றுகளைத் துறந்தவர்கள் என்றாலே முற்றாக அவா அற்றவர்கள்தாம்; மற்றையார் அற்றாக அற்றது இலர் = அவா முற்றிலும் அறாத ஏனையர் துறவு நிலையில் இலர் என்றே பொருள்.
பற்றுகளைத் துறந்தவர்கள் என்றாலே முற்றாக அவா அற்றவர்கள்தாம். அவா முற்றிலும் அறாத ஏனையர் துறவு நிலையில் இலர் என்றே பொருள்.
உண்மையான உண்மையே செம்பொருள். அறவழி நடத்தலே செம்பொருளைக் காண வழி என்று நம் பேராசான் தெளிவுபடுத்தினார். காண்க 06/02/2024.
செய்ய வேண்டியன எதுவென்றால் அறச் செயல்களே; தவிர்க்க வேண்டியன எதுவென்றால் பழியைத் தரும் தீவினைகளே என்றார் குறள் 40 இல். காண்க 22/02/2021. மீள்பார்வைக்காக:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. – 40; - அறன் வலியுறுத்தல்
பாயிரவியலின் இறுதி குறளாக அமைந்ததுதான் மேற்கண்ட குறள்.
துறவறவியலின் இறுதி அதிகாரத்திலும் அதே போன்ற கருத்தைக் கொண்ட குறளை வைத்துள்ளார்.
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. – 366; - அவா அறுத்தல்
ஓரும் - அசை நிலை, பொருள் இல்லை;
அஞ்சுவது அறனே = ஆசைகளுக்கு அஞ்சி அவற்றைத் தவிர்க்கும் ஒவ்வொரு செயலும் அறமே. இவையே செயற்பால; ஒருவனை வஞ்சிப்பது அவா = ஒருவனை வஞ்சிப்பன, படு குழியில் தள்ளுவன எவையென்றால் எண்ணிலடங்கா ஆசைகள்தாம். இஃதே உயற்பால. உயற்பால என்றால் தவிர்க்க வேண்டியன.
ஆசைகளுக்கு அஞ்சி அவற்றைத் தவிர்க்கும் ஒவ்வொரு செயலும் அறமே. இவையே செயற்பால; ஒருவனை வஞ்சிப்பன, படு குழியில் தள்ளுவன எவையென்றால் எண்ணிலடங்கா ஆசைகள்தாம். இஃதே உயற்பால. உயற்பால என்றால் தவிர்க்க வேண்டியன.
நிம்மதியாக நீங்க வேண்டுமா அவாவினை அறுத்துவிடுங்கள்.
ஆசை வேறு; தேவை வேறு என்பதில் தெளிவு இருக்கட்டும்.
அனைவரின் தேவைக்கும் போதுமான அளவில் உலகில் பொருள்கள் நிரம்பியிருக்கின்றன; ஆனால், அனைவரின் பேராசைக்கு அவை எப்போதும் போதுமானதாக இருக்கா. – மகாத்மா காந்தி
“The world has enough for everyone's needs, but not enough for everyone's greed.” – Mahatma Gandhi.
சிந்திக்க வேண்டிய கருத்து.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

Comments