top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

அவாவென்ப எல்லா ... 361, 368, 09/02/2024

09/02/2024 (1070)

அன்பிற்கினியவர்களுக்கு:

ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசையை அறுத்தல் உயரிய ஞானம். ஆசையை அறுக்கவிட்டால் அது நம்மைச் செத்துச் செத்துப் பிழைக்க வைக்கும்.

 

அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்

தவாஅப் பிறப்பீனும் வித்து. – 361; - அவா அறுத்தல்

 

தவா = முடிவின்றி, அழியாத, நிங்காத, கெடாத, தப்பாத, விடாத;

அவா என்ப = அவா என்பது; எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து = எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் செத்துச் செத்துப் பிழைக்க வைத்துத் துன்பத்தை விளைவிக்கும் விதை போலச் செயல்படும்.

 

அவா என்பது எல்லா உயிர்களையும், எல்லாக் காலங்களிலும் செத்துச் செத்துப் பிழைக்க வைத்துத் துன்பத்தை விளைவிக்கும் விதை போலச் செயல்படும். இஃது ஓர் உண்மையான உண்மை.

 

அவாவை அறுக்காவிட்டால் மறுபிறவிகள் இருக்கும் என்பர் பெரும்பாலான சமய அறிஞர்கள்.

 

அவாவின் வரையறையை (definition) முதல் பாடலில் சொன்னார்.

 

அவாவை அறுத்தால் என்ன ஆகும்? அவாவை அறுக்காவிட்டால் என்ன ஆகும்? என்ற வினாவிற்கு விடையாக ஒரு குறளைச் சமைத்துள்ளார்.

 

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்

தவாஅது மேன்மேல் வரும். – 368; - அவா அறுத்தல்

 

அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் = அவா இல்லாதவர்க்கு எந்தத் துன்பங்களும் வாரா; அஃது உண்டேல் துன்பம் தவாஅது மேன்மேல் வரும் = மாறாக, அவா என்ற ஒன்று இருப்பின் வேறு எந்தக் காரணங்களும் இல்லாவிட்டாலும்கூட துன்பங்கள் முடிவின்றி மேன்மேலும் வந்து கொண்டே இருக்கும்.

 

அவா இல்லாதவர்க்கு எந்தத் துன்பங்களும் வாரா. மாறாக, அவா என்ற ஒன்று இருப்பின் வேறு எந்தக் காரணங்களும் இல்லாவிட்டாலும்கூட துன்பங்கள் முடிவின்றி மேன்மேலும் வந்து கொண்டே இருக்கும்.

 

அவா அறுத்தல் இன்பம்; அவா துன்பம். அஃதே!

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




2 Kommentare


velakode
09. Feb. 2024

Very interesting. What is said in thirukkurals on DESIRE are in line with what is said in Bhagavat Gita and teachings of Buddha. Gita and Buddhas teach on meditation. I wonder whether Thiruvalluvar also covers that ...directly or indirectly.

Gefällt mir
Antwort an

Thanks for the inputs sir. Can you please expand on the references to meditation in Gita, so that we can look for it.

Gefällt mir
bottom of page