இன்பம் ஒருவற்கு இரத்தல் ... குறள் 1052
05/02/2022 (345)
இரக்க இரத்தக்கார்க் காணின் என்று ‘இரவு’ அதிகாரத்தின் முதல் குறளில் சொன்னார் நம் பேராசான். ‘காணின்’ என்று ஏன் போட்டுள்ளார் என்றால் இரத்தக்கவர்களை காண்பது அரிதாம். அதனால்தான் ‘காணின்’ என்று சொல்லியிருக்காராம். அந்தக் காலத்திலேயே அப்படி என்றால் இப்போது அதைவிட அரிதாகத்தான் இருப்பார்கள்.
இந்தக் குறளைத் தொடர்ந்து வரும் குறள்:
“இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.” --- குறள் 1052; அதிகாரம் - இரவு
இதை நாம் ஏற்கனவே ஒரு குறிப்பாகப் பார்த்துள்ளோம்.
ஒருவற்கு இரத்தல் இன்பம் = ஒருவற்கு இரத்தல் என்பதுகூட இன்பம் பயக்கலாம்; இரந்தவை துன்பம் உறாஅவரின் = ஈவார்களின் தாராள மனத்தால் இரப்பவர்களுக்கு ஒரு துண்பமும் கொடுக்காமல் அவர்களுக்கு தேவையானவை வருமானால்!
சிலரிடம் ஒரு உதவி என்று கேட்க வேண்டுமானால், தகுந்த சமயம், இடம் பார்க்கனும், அவர்களை நம் பேச்சால் மயக்கனும், மேலும் அவர்களைப் புகழனும், அவங்க மகிழுமாறு பல செயல்கள் செய்யனும் … இப்படி பல ‘உம்’ கள் இருக்கு. ம்ம்.. இதெல்லாம்தான் துண்பம் என்கிறார்.
இது வழி அவர்கள் தன்மானத்தை இழக்காமல், கேட்ப்போரின் உள்ளம் அறிந்து ஒருத்தர் கொடுத்தால் பெறுபவர்களுக்கு அது இன்பம் அல்லவா?
பதினேழாம் நூற்றாண்டில், காஞ்சிபுரத்தில் பிறந்தவர் சிவப்பிரகாச சுவாமிகள். உவமைகள் சொல்வதில் வல்லவர். இவருக்கு கற்பனைக் கள்ஞ்சியம் என்றே ஒரு பெயர் உள்ளது. தமிழில் பெரும் புலமை பெற்றவர். முப்பத்திரண்டு வயதுவரை வாழ்ந்த இப்பெருமான் முப்பத்தி நான்கு நூல்களுக்கும் மேல் இயற்றியுள்ளார். நாற்பது பாடல்கள் கொண்ட ‘நன்னெறி’ என்ற நூலை இயற்றியவர் இந்தப் பெருந்தகையே.
நன்னெறியில் முதல் பாடல்:
“என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் – துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து.” --- நன்னெறி 1; சிவப்பிரகாசப் பெருமான்
தன்னைப் பாராட்டி பேசாதவர்களிடமும் அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பார்களாம் எப்படி என்றால் நாம் சாப்பிடும் போது நமது கை நம் வாயிற்கு உணவைக் கட்டளையிடாமலே கொடுப்பது போலவாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
