top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

எண்பொருள வாகச் செலச்சொல்லி ... 424, 724, 01/05/2024

01/05/2024 (1152)

அன்பிற்கினியவர்களுக்கு:

நுணங்கிய கேள்வியராக இருப்பது முக்கியம்.  அதனிலும் நுண்பொருள் காண்பது அறிவு என்கிறார்.

 

நுணங்கிய கேள்வியராக மாறுவது எப்படி?

 

முதல் குறிப்பு:

கற்றவர்கள் அவைகளில் நாம் கற்றவற்றை அவர்கள் விரும்பிக் கேட்குமாறு சொல்லித் தம்மைவிட கற்றவர்களிடமிருந்து, அவர்கள் சொல்லும் அதிகப்படியான கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். காண்க 02/06/2023. மீள்பார்வைக்காக:

 

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல். - 724; - அவையஞ்சாமை

 

கற்றவர் விரும்பிக் கேட்கும் விதமாகச் சொல்வது எப்படி?

 

பணிவு, இன்சொல், சொல்வதில் எளிமை இம் மூன்றும் ஒருவரிடம் இருந்தால் அனைவருமே அவரை விரும்புவர். இதுதான் இரண்டாம் குறிப்பு.

 

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்பது அறிவு. – 424; - அறிவுடைமை

 

எண்மை = எளிய தன்மை;

 

தான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி = தான் சொல்லும் சொல் பிறர்க்கு எளிதில் புரியும் விதத்தில் சொல்வதனால்; பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு = அவற்றைப் புரிந்து கொண்டு, பிறரும் அந்தக் கருத்தை விரித்து அவற்றின் நுண்பொருளை விளக்க ஏதுவாகும். தமக்கு அறிவு கொள்முதலும் ஆகும்.

 

தான் சொல்லும் சொல் பிறர்க்கு எளிதில் புரியும் விதத்தில் சொல்வதனால்; பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு = அவற்றைப் புரிந்து கொண்டு, பிறரும் அந்தக் கருத்தை விரித்து அவற்றின் நுண்பொருளை விளக்க ஏதுவாகும். தமக்கு அறிவு கொள்முதலும் ஆகும்.

 

அறிஞர் பெருமக்கள் என்பவர்கள் ஏதோ வயதில் மூத்தோராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறிய வயதினரும் அவர்கள் இருக்கும் துறையில் வல்லுநர்களாக இருக்கலாம். நாம் அறிவு கொள்முதல் செய்து கொள்ளும் இடத்தில் யார் இருந்தாலும் அறிஞர்களே!

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Yorumlar


bottom of page