top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

செய்வானை நாடி ... 516

13/12/2022 (649)

ஒரு வேலையைத் தெரிந்து செய்யக்கூடியவனிடம் கொடுக்கனும், அவன் சிறந்தவன் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அவனிடம் கொடுப்பது சரியில்லாமலும் போகலாம் என்றார் குறள் 515ல்.


நம்மாளு: ஐயா, நான் அவன் ‘அறிந்து ஆற்றி’ வேலையை முடிப்பான் என்றுதான் கொடுத்தேன். ஆனால், அவன் ரொம்பவே காலம் தாழ்த்துகிறான்.

ஆசிரியர்: அதைத்தான் அடுத்தக் குறளில் சொல்கிறார்.


முதலில், அவன் வேலையைச் செய்து முடிப்பானா என்று பாருங்க. பிறகு அவன் சரியான நேரத்தில் முடிப்பானா என்றும் பார்க்கனும் என்கிறார்.


செய்வானை நாடி வினை நாடிக் காலத்தோடு

எய்து உணர்ந்து செயல்.” --- குறள் 516; அதிகாரம் – தெரிந்து வினையாடல்


வினை நாடி =இந்த வேலை எப்படிப்பட்து என்று தெரிந்து கொண்டு; செய்வானை நாடி = இதை இவன் செய்து முடிப்பான் என்பதையும் கணக்கிட்டு; காலத்தோடு எய்த = அதையும் உரித்த காலத்தோடு முடிக்கும் வகையில் / காலத்தோடு இயைந்த வகையில்; உணர்ந்து செயல் = உணர்ந்து செய்தல் வேண்டும்.


இந்த வேலை எப்படிப்பட்து என்று தெரிந்து கொண்டு; இதை இவன் செய்து முடிப்பான் என்பதையும் கணக்கிட்டு; அதையும் உரித்த காலத்தோடு முடிக்கும் வகையில் / காலத்தோடு இயைந்த வகையில்; உணர்ந்து செய்தல் வேண்டும்.


இரண்டுமே முக்கியம். எந்த இரண்டு?


காலத்தோடு முடிக்கனும்; காலத்தோடு பொருந்தியும் இருக்கனும், இந்த இரண்டும் தான்.


காலத்தோடு பொருந்தி இருப்பதுதான் “Trend” அல்லது “in vogue” என்கிறார்கள். காலத்தில் பின் தங்கியிருந்தால் old fashion (பழைய பஞ்சாங்கம்) ஆகிவிடும். காலத்தில் மிகவும் முன்நோக்கியிருந்தாலும் “ahead of time” ஆகிவிடும்.


வரும் காலத்தை எதிர் நோக்கி அதற்கு நம்மைத் தயார் செய்து கொண்டு இருக்கனும். தகுந்த காலத்தில் அதை வெளிப்படுத்தனும். அப்போது வெற்றி நிச்சயம்.


நம்மாளு: ஐயா, நம்ம பேராசான் skill development (திறன் மேம்பாடு) பற்றி ஏதேனும் சொல்லியிருக்காரா?


ஆசிரியர்: நாளைக்கு பார்க்கலாமா?


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




Comentarios


bottom of page