சிறுமை பலசெய்து ... 934
04/07/2022 (493)
“…ஆயிரங்களான – நீதி, அவைஉ ணர்ந்த தருமண்
தேயம் வைத்திழந்தான்; -- சிச்சீ! சிறியர் செய்கை செய்தான். “ … மகாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம்
எவ்வளவு பெரிய நீதிமானாக இருந்தாலும் சூதில் ஆழ்ந்துவிட்டால், சிறிய செயல்களைச் செய்ய வைக்கும். ஒருவனின் ஒழுங்கை சீரழிக்கும்.
சிறுமையை, அதாவது தலை குனிவைத் தரும். முடிவில் வறுமையையும் தருவதில் சூது போன்று ஒன்று இல்லை.
“சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்றுஇல்.” --- குறள் 934; அதிகாரம் – சூது
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் = பல மானங்கெட்ட செயல்களைச் செய்ய வைத்து சீரழிக்கும் சூதைப் போல்;
வறுமை தருவது ஒன்றுஇல் = ஒருவனை ஒன்றும் இல்லாதவனாகச் செய்வது ஒன்றும் இல்லை.
பல மானங்கெட்ட செயல்களைச் செய்ய வைத்து சீரழிக்கும் சூதைப் போல், ஒருவனை ஒன்றும் இல்லாதவனாகச் செய்வது ஒன்றும் இல்லை.
சூதினால், பல தலைமுறைகளில் கடுமையாக உழைத்து ஈட்டிய பொருள்களை சில மணித்துளிகளில் இழக்கலாம். அதனால்தான் சூதைப் போன்று வறுமைத் தருவது ஒன்று இல்லை என்கிறார் நம் பேராசான்.
சூது என்பது ஏதோ தாயம் உருட்டுவது மட்டுமன்று. “நம்ப முடியாத அளவில் லாபம் கிடைக்கும். வாங்க, எங்களிடம் உங்கள் பணத்தைப் போடுங்கள். பத்து நாளில் பத்து மடங்கு ஆகும்” என்றால் அதை நம்பி பனத்தைப் போடுவதும் சூதுதான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
