செறிவறிந்து சீர்மை பயக்கும் ... குறள் 123
- Mathivanan Dakshinamoorthi
- Oct 8, 2021
- 1 min read
08/10/2021 (227)
“அறிவுரு ஆராய்ந்த கல்வி இம்மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.” ---குறள் 684; அதிகாரம் - தூது
இயல்பான அறிவு, பார்ப்பவர்கள் மதிக்கும் தோற்றம், ஆராய்ந்து அறிந்தக் கல்வி இம் மூன்றின் செறிவு உள்ளவர்கள் தூது செல்ல வேண்டும் என்கிறார் நம் பேராசான்.
அது என்ன செறிவு?
அறிவு, தோற்றப் பொலிவு, கல்வி இவை மூன்றும் சேர்வது கொஞ்சம் கடினமான காரியம்தான். அப்போ அங்கே கொஞ்சம் பெருமை, தலைக்கணம் தோன்றுமாம். அதற்குதான், செறிவு தேவையாம்.
செறிவு என்றால் அடக்கம், அமைதி இருக்கனுமாம்.
அது எப்போது வரும்? நிறைவு ஏற்பட்டால் வரும்.
நிறை குடம் தளும்பாது!
தண்ணீரில் உப்பை கலந்து கொண்டே இருந்தால் ஒரு அளவிற்கு மேல் உப்பு கரையாது. அது நிறை கரைசல் (Saturated solution) ஆகிவிடும். அது அமைதியாகிவிடும்.
அடக்கமுடைமை என்ற ஒரு அதிகாரம் (13வது அதிகாரம்) வைத்துள்ளார் நம் பேராசான். அதிலே மூன்றாவது குறள்:
“செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.”--- குறள் 123; அதிகாரம் – அடக்கமுடைமை
அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் = அடக்கமாக இருப்பதே அறிவு என்பதைத் தெரிந்து, அந்த வழியிலே அடங்கி இருந்தால்; செறிவறிந்து சீர்மை பயக்கும் = அந்த அடக்கம், நல்லோரால் கவனிக்கப் படும். அது அவனுக்கு நன்மை பயக்கும்.
அடக்கம் என்றால் எல்லா வகையிலும் அடக்கம். எல்லா வகை என்றால் மெய், வாய், கண், மூக்கு, செவி என்று எல்லாம் அடங்கி இருக்கனும்.
முயற்சி பண்ணுவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.

Comments