பல்லார் பகை ... 450, 29
05/04/2022 (403)
நாம் ஒரு குறளைப் பார்த்திருக்கோம் நீத்தார் பெருமை அதிகாரத்தில் இருந்து. மீள்பார்வைக்காக: காண்க 12/08/2021 (170)
“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.” --- குறள் 29; அதிகாரம் – நீத்தார் பெருமை
குணங்கள் ஆகிய குன்றுகளின் மீது ஏறி நின்றவர்களாகிய முற்றும் துறந்தவர்களின் கோபத்தை ஒரு நொடியே ஆகினும் நம்மாலே தாங்க முடியாது.
இப்போ நாம இன்றைய குறளுக்கு வருவோம்.
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் முடிவாக நம் பேராசான் சொல்வது ரொம்பவே சிந்திக்க வேண்டியது.
எந்த ஒரு பகையுமே காலத்தைக் கருக்கும், மகிழ்ச்சியைச் சுருக்கும். பலரின் பகையை சம்பாதித்தால் கேட்கனுமா? அதை சமாளிப்பது என்பது மிகவும் கடினம்.
அந்தப் பலரின் பகையும் பத்து மடங்கு பெருகிப் போயிட்டா அது எவ்வளவு பெரிய தீமையை ஏற்படுத்தும். அதைவிட ஒரு தலைவனுக்கு தீங்கு ஏற்படனுமா? ன்னு கேட்கிறார் நம் பேராசான்.
அதற்கும் வழி இருக்காம்! கெட்டுப் போவதற்கெல்லாம் வழி சொல்கிறாரா வள்ளுவப் பெருந்தகை. அப்படியில்லை எச்சரிக்கிறார்!
அது என்னன்னா, நாம் பற்றி நடந்துவந்த நல்லவர்களின் கைகளை விட்டுவிடுவதால் பெரும் தீமை ஏற்படுமாம்.
“பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.” --- குறள் 450; அதிகாரம் – பெரியாரைத் துணைக்கோடல்
பலரின் பகையால், அதுவும் பத்து மடங்கானால் எவ்வளவு தீமை விளையுமோ அதைவிட தீமை விளையும். எப்போ? நல்லவர்களின் தொடர்பை கை விட்டுவிட்டால்.
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே = பலரின் பகையால், அதுவும் பத்து மடங்கு பெருகினால் எவ்வளவு தீமை விளையுமோ அதைவிட தீமை விளையும்; நல்லார் தொடர்கை விடல் = நல்லவர்களின் தொடர்பை கை விட்டுவிட்டால்.
தொடர்பை என்பதற்கு பதிலாக தொடர்கை என்கிறார். சிந்திக்க வேண்டிய சொற்றொடர். இப்போ, ஆரம்பத்தில் சொன்ன குறளை மீண்டும் ஒரு முறை படிங்க ப்ளிஸ்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
