top of page
Search

உலகத்தார் உண்டென்பது இல் ... குறள் 850

14/02/2021 (28)

நன்றி, நலம், வாழ்த்துக்கள்.


திருக்குறள் அமைப்பு முறை பற்றி கொஞ்சம் பார்த்துட்டு அப்புறம் இன்றைய குறளுக்கு போகலாம்ன்னார் என் ஆசிரியர்.


அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய கூறுகளிலே, ‘வீடு’ பற்றி நேரடியா சொன்னா சரியில்லைன்னு நினைத்த வள்ளுவப்பெருமான், மற்ற மூன்று கூறுகளிலேயே அதன் குறிப்பை ஆங்காங்கே உணர்த்தியிருக்காரு. சிலர், வீடை விட்டுட்டாரேன்னு கேள்வி எழுப்பறாங்க. விடவேண்டியது தான் வீடுன்னும் நினைத்திருக்கலாம்!


அந்த மூன்று அறக்கூறுகளையும், பெரும் பிரிவுகளாக (பாலாக) அறத்துப்பால், பொருட் பால், மற்றும் இன்பத்துப்பால் ன்னு பிரித்துள்ளார்.


இந்த பெரும் பிரிவுகளை, மேலும் ‘இயல்கள்’ ஆக பகுத்துள்ளார். மேலும், இயல்களை, ‘அதிகாரங்கள்’ ஆக மேலும் வகைப்படுத்தியுள்ளார். நம்ம எல்லாருக்கும் தெரியும், அதிகாரங்களில் தான் குறள்களை அமைத்துள்ளார்.


நான்: இதெல்லாம் எதுக்கு ஐயா தெரிஞ்சுக்கனும்?


இது தெரிஞ்சா, இடமறிந்து குறள்களுக்கு சரியான முறையில பொருள் காணலாம். இல்லைனா, குறள்களிலே முரண் இருப்பது போல தோன்றும்.


சரி, இதை மேலும் அப்புறம் தொடரலாம். நேற்றைய கேள்விக்கான குறளை பார்த்தியா?


வழக்கம் போல, நான் பார்பதற்குள்ளே, என் தம்பி ரத்தன் அந்த குறளை அனுப்பிவைச்சுட்டார்.


அப்படியா, அவருக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடு. சரி, அந்த குறளை சொல்லு.


இதோ அந்த குறள்:


“உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்” --- குறள் 850; அதிகாரம் – புல்லறிவான்மை


அலகையா = பேய் போல(அச்சமூட்டூம் வகையிலே இருப்பதனால் இந்த உவமை) (‘பேய்’ ன்னு சொன்னா அவனுக்கும் கால் இருக்குதேன்னு கேட்கப்படாது!)


சான்றோர்களால் ஆய்ந்து அறிந்து, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை ஒருவன் இல்லை என்று கூறினால் அவனை நாம கொஞ்சம் தள்ளி நின்று தான் பார்கோனும். சரியா?


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்






11 views0 comments
Post: Blog2_Post
bottom of page