செயற்பால தோரும் ... 40
- Mathivanan Dakshinamoorthi
- Feb 22, 2021
- 1 min read
22/02/2021 (36)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நாம தொடர்ந்து ‘அறன் வலியுறுத்தல்’ங்கிற அதிகாரத்தில் இருந்து பல குறள்களைப் பார்த்தோம்.
மனத்துக்கண் பொறாமை, பேராசை, கோவம் அதனாலே உண்டாகும் கடுஞ்சொல் ஆகியவற்றைத் தவிர்க்க ‘அறம்’ பெருகும். அந்த அறத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் செய்வதுதான் மேன்மேலும் உயர்வதற்கு வழின்னும், அதுவேதான் அமைதியா இந்த உலகத்தை விட்டுப் போகும் ‘வீட்டுப்பேற்றை’யும் கொடுக்கும்ன்னு பார்த்தோம்.
இதெல்லாம் சொன்ன வள்ளுவப் பெருந்தகைக்கு இன்னும் சொல்லணும்னு தோணி மேலும் சில குறள்களைச் சொல்கிறார்.
அவருக்கு மனசு ஆறலை. சரியா சொல்லிட்டோமான்னு ஒரு சந்தேகம் வந்திருக்கும் போல. அதனாலே செய்வதெல்லாம் அறமாக இருக்கணும், தள்ளிப் போட வேண்டியது, தவிர்க்க வேண்டியது ‘பழி’ என்னும் அறமல்லாதவையே.
அறத்தைத் தள்ளினா பழிதான் வரும்ன்னு முடிவாக 40 ஆவது குறளில் சொல்கிறார் இப்படி:
“செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. “ ---குறள் 40; அதிகாரம் – அறன் வலியுறுத்தல்
செயற்பால = செய்வதெல்லாம்; உயற்பால =ஒழிக்க வேண்டிய தன்மையுடையது; உயல் = ஒழித்தல், தள்ளிப்போடுவது; பால = தன்மையுடைய; ஓரும் –அசை நிலை - பொருள் கிடையாது.
நம்மாளு: (மனசுக்குள்ளே: அதான், சும்மா சுத்தினுகிறவனுங்க ‘உயண்டுகினுகிறேன்’ ன்னு சொல்றாங்க போல!) ம்ம்…
மேலும் சில குறள்கள் இந்த அதிகாரத்திலே இருக்கு. அதெல்லாம் கொஞ்சம் விவகாரமான குறள்களா இருக்கு.
அவங்க, அவங்க நம்பிக்கைகளுக்கு ஏற்றாற் போலப் பொருள் எடுத்துக்கலாம்.
அதையும் வரும் நாள்களில் பார்க்கலாம்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.

Comments