21/06/2023 (839)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
“சின்ன கல்லு பெத்த லாபம்” என்ற வசனத்தைக் கேட்டிருப்போம். அது அரணுக்கும், அதாவது பாதுகாப்பிற்கும் முக்கியமாம்.
அது எப்படி?
பாதுகாப்பிற்கே வருவாய் மொத்தம் செலவழிப்பது என்பது விரும்பத்தகாதது. பாதுகாப்பிற்கு ஆகும் செலவு சிறியதாக இருக்க வேண்டும்; அதனால் நமக்கு கிடைக்கும் பாதுகாப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
எதனிடம் இருந்து பாதுகாப்பு? உட்பகை, வெளிப்பகை இரண்டில் இருந்தும்.
தனி மனிதனுக்கு உட்பகை வேண்டாத எண்ணங்கள். அதற்கு மனத்தைக் கவனித்தால் போதும்.
ஒரு இளைஞனுக்கும் ஒரு முதியவருக்கும் உரையாடல். அந்தப் பெரியவர் அவனிடம் சொன்னாராம்:
“தம்பி, மனத்தை அடக்குவது ரொம்ப கடினம் தம்பி. அதை அடக்க நினைத்தால் வெகுண்டு எழும். அறிய நினைத்தால் அடங்கும்” என்றாராம்.
இளைஞன்: ஐயா, மனத்தையெல்லாம் ரொம்ப சுலபமாக அடக்கலாம். நான் அதை அடக்கிக் காட்டுகிறேன் பாருங்க. அதற்கு தனியான இடத்திலே இருந்தாலே போதும்.
முதியவர்: சரி, தம்பி செய்யுங்க.
அந்த இளைஞன் என்ன செய்தார் என்றால், மனத்தை அடக்க ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டாராம்.
அந்தச் சமயம் பார்த்து அந்த வழியாக, தனியாக அழகியப் பெண் ஒருவள் நடனம் பயில முழு அலங்காரத்தோடு நடந்து சென்றாளாம்.
நம்மாள் நிலைமையை நினைச்சுப் பாருங்க. அந்தப் பெண் பின்னாலேயே அவனின் மனம் சென்றதாம்.
ச்சே.. என்ன இது? இந்தக் கண் பார்ப்பதால்தான் தொந்தரவு என்று நினைத்து ஒரு துணியை எடுத்து கண்ணை இறுக்கிக் கட்டிக் கொண்டு அமர்ந்தானாம்.
மறுநாள், அதே நேரம். சல், சல் என்று சலங்கை ஒலி. அதேப் பெண் அதே வழியாக வந்தாளாம். நம்மாளுக்கு அவள்தான் என்று தெரிந்துவிட்டது.
அப்புறம் என்ன, அன்றைக்கும் அவரின் சபதம் அதோகதிதான்.
சரி, நாம் நாளைக்கு ஏமாந்துவிடக் கூடாது என்று நினைத்து, இரு காதுகளையும் அடைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாராம். இப்போ பார்க்கலாம்; இந்த மனது என்ன செய்கிறது என்று ஒரு சவால் வேறு விட்டாராம்!
மறுநாள் அதே நேரம். மெல்லிய ஒரு நறுமனம் மூக்கைத் துளைத்ததாம். அந்தப் பெண்ணின் கூந்தலில் இருந்த மலரின் வாசம் அது. அப்புறம் என்ன? அன்றைக்கும் சோதனைக்கு சோதனைதான்.
ச்சீ.. இது என்ன சோதனை. இருந்தாலும் நான் விடமாட்டேன் என்று சபதம் எடுத்து மூக்கையும் அடைத்துக் கொண்டாராம்! இப்போ பார்த்துடலாம் என்று அமர்ந்து கொண்டாராம்.
மறு நாள் அதே நேரம். அப்போது, அவனின் மனம் நினைத்ததாம். இந்நேரம் அவள் சென்று கொண்டிருப்பாள் என்று! இதுதான் மனம்!
மனத்தை எதைக் கொண்டு அடக்க?
இதற்குத்தான் பகவான் ரமண மகரிஷி சொல்கிறார் மனத்தை அறிய அது அடங்கும். மனத்தை அடக்க நினைத்தால் அது மீண்டும் மீண்டும் எழும் என்கிறார்.
அதாவது, ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மனத்தை நிலைப்படுத்தும் முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சரி, எதற்கு இந்தக் கதை என்கிறீர்களா?
நம் பேராசான் என்ன சொல்கிறார் என்றால் நமது பரந்துபட்ட இடத்தை வெளிப் பகை வெற்றி கொள்ள நினைக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடையும் வண்ணம் நமது பாதுகாப்பு இருக்க வேண்டுமாம். அதற்காக நாம் மிக அதிகமாகப் பொருள் செலவோ, ஆள் செலவோ செய்யக் கூடாதாம்.
“சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.” --- குறள் 744; அதிகாரம் – அரண்
பேர் இடத்தது சிறுகாப்பின் ஆகி = பெரிய இடமாக இருந்தாலும் சிறிய பாதுகாப்பிலே; உறுபகை ஊக்கம் அழிப்பது அரண் = வெளியில் இருந்து வரும் பகையின் முயற்சியை அழிப்பதுதான் அரண்.
பெரிய இடமாக இருந்தாலும் சிறிய பாதுகாப்பிலே, வெளியில் இருந்து வரும் பகையின் முயற்சியை அழிப்பதுதான் அரண்.
பல அறைகள் கொண்ட அகன்ற வீடாக இருந்தாலும், வாசல் சின்னதாக அமைக்கும் முறைமையும் அதனால்தான்.
சின்ன கல்லு பெத்த லாபம்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
![](https://static.wixstatic.com/media/c06c53d350fc4ee8ae983c17fdc851ae.jpg/v1/fill/w_147,h_98,al_c,q_80,usm_0.66_1.00_0.01,blur_2,enc_auto/c06c53d350fc4ee8ae983c17fdc851ae.jpg)