top of page
Search

தகுதி எனஒன்று ... 111, 190

13/06/2021 (111)

ஐந்தாவது அதிகாரம் தொடங்கி இல்லறவியலை விளக்குகிறார் நம் பேராசான். இல்வாழ்க்கை(5), வாழ்க்கைத் துணை நலம்(6), புதல்வரைப் பெறுதல் (7), அன்புடைமை (8), விருந்து ஓம்பல் (9), இனியவை கூறல்(10), செய் நன்றியறிதல் (11), நடுவு நிலைமை (12) ….


என்ன ஒரு ஒழுங்கு பாருங்க. அறம் செய்ய இல்வாழ்க்கை முக்கியம்; அதுக்கு முக்கியம் ஒரு துணை ஆகவே வாழ்க்கைத் துணை நலம்(6); அவர்களுக்கு இடையே இருக்க வேண்டிய நட்பு, பிணைப்பு வளரனும் என்றால் மக்கட்பேறு தேவை எனவே புதல்வரைப் பெறுதல் (7); அப்புறம் என்னாகுது அன்பு வளருது அதுக்கு அன்புடைமை (8); அன்பு பொங்கினால் மகிழ்ச்சி பரவுது (ஏதாவது நிரம்பினால் வழிந்து ஓடித்தானே ஆகனும்) சுற்றத்தை தேடுது - இதற்காக விருந்து ஓம்பல் (9).


இப்போ அடுத்த படியா வெளிய கால் வைக்கனும். அதுக்கு உண்டான அறத்தை சொல்கிறார் வள்ளுவப்பெருந்தகை. அதுக்கு முதல் தகுதியா நல்ல இனிமையாக பேசனும் அதுக்கு இனியவை கூறல்(10); அடுத்து, செய் நன்றியறிதல் (11), எல்லோரிடத்திலும் நன்மதிப்பை பெறனும் என்றால் ஒரு சார்பில்லாம இருக்கனும் இதற்காக நடுவு நிலைமை (12)… அழகா அடுக்கியிருக்காரு இல்லையா? இன்றைக்கு 111 வது நாள். 111வது குறளைப் பார்க்கலாம்.


“தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.” --- குறள் 111; அதிகாரம் - நடுவுநிலைமை

எடுத்த உடனே எப்படி ஆரம்பிக்கிறார் பாருங்க. ‘தகுதி’ என்று! தகுதி என்றால் என்ன? இதுக்கு ஐயன் பரிப்பெருமாள் ‘தக்கவாறு கூறுதல் தகுதி’ ன்னு சொல்கிறார். அது என்ன ‘தக்கவாறு’? தக்கவாறு என்றால் அனைவருக்கும் ‘தகுந்தவாறு’, ‘ஏற்குமாறு’ ன்னு பொருள் சொல்லலாம். அது எப்பவரும்? நடுவு நிலைமை இருந்தாத்தானே வரும். அதைத்தான் சுருக்கி ‘தகுதி’ ன்னு போட்டிருக்காரு. இங்கே ‘தகுதி’ என்றாலே நடுவு நிலைமை தான். அது ஒன்றே நல்லது.


அடுத்து ‘பகுதியால்(ன்)’ – இது என்னது? சமுதாயத்தை மூன்றாக பிரிக்கலாமாம். அதாவது: பகை, நொதுமல், நட்பு இப்படின்னு. பகை, நட்பு ஆகிய சொற்கள் நமக்குத் தெரியும். ஆனால் ‘நொதுமல்’ ன்னா என்னன்னு கேட்கறீங்க? அது ஒன்றுமில்லை பகையும் இல்லாமல் நட்பும் இல்லாமல் இருக்கும் இல்லையா அந்தக் கூட்டம். இதில் எந்தப் பகுதியாய் இருந்தாலும், விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடுவு நிலைமையா நடந்துட்டால் அதுதான் பெரிய தகுதியாம்! அதுவே ஒரு அறம்! இப்போ இன்னுமோர் குறள் கவனத்துக்கு வருது. இதோ அந்தக் குறள்:


ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.” குறள் 190; அதிகாரம் - புறங்கூறாமை

நாளை(த்) தொடர்வோம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்



Post: Blog2_Post
bottom of page