top of page
Search

நல்லாறு எனினும் ... 222

தமிழில் கொடுப்பதற்கு என்ற பொருளில் மூன்று சொற்கள் பயன் படுத்துகிறோம். ஈவது, தருவது, கொடுப்பது. அதிலே இருக்கும் வித்தியாசங்கள் என்ன?


உதவி பெறுபவர்கள் மூன்று வகை. நம்மில் தாழ்ந்தவர்கள்/வறியவர்கள், சம நிலையில் உள்ளோர், நம்மில் உயர்ந்தோர்.


“வறியார்க்கொன்று ஈவதே ஈகை …” என்ற குறளை சில நாட்களுக்கு முன் பார்த்தோம். ஈவது என்பது வறியவர்களுக்கு (ஈந்தவனுக்கு திருப்பித்தர வகையற்றவர்களுக்கு) ஈவது.


‘தருவது’ என்பது சமமானவர்களுக்கு தருவது. ‘கொடுப்பது’ என்றால்தான் நம்மில் உயர்ந்தோர்களுக்கு கொடுப்பது. தருவதும், கொடுப்பதுமாகிய இரண்டும் நமக்கு திரும்ப பயன்தர வாய்ப்புள்ளது.


கொடுப்பதை இரண்டு வகையாக பிரிக்க வேண்டுமென்றால் 1. நேரடியாக பயன் பயக்க வாய்ப்புள்ளது; 2. நேரடியாக பயன் பயக்க வாய்ப்பில்லாதது.


சரி இது ஏன் இப்போது என்கிறீர்களா? சற்று பொறுங்கள்.


ஒப்புரவு அறிதல் (22) ஈகை (23) என இரண்டு அதிகாரங்களாக வைத்துள்ளார் நம் பேராசான். இதிலே, ஒப்புரவு அறிதல் என்பது பயனளிக்கும் வாய்ப்புள்ள கொடை. ஈகை என்பது உடனடியாக பயனளிக்க வாய்ப்பில்லாத கொடை.


அது என்ன ‘உடனடியாக’, நேரடியாக’ என்று கேட்பீர்களேயானால் நாம் வாழும் இந்த உலகத்திலேயே அதன் பயன் இருக்கும். அதாவது இம்மைப்பயன். மற்றது, நாம் இந்த உலகை விட்டு பிரிந்து கிடைக்கும் என்கிற ‘மறுமைப்பயன்’. (மறுப்பாளர்களுக்கு, அவர்கள் மறைந்தபின், புகழ் கிடைக்கும்.) இதைத்தான் தனித்தனியாக பிரித்திருக்கிறார் நம் வள்ளுவப் பெருமான்.


சரி எங்கே குறள் என்கிறீர்களா? வரப்போகும் குறளுக்குத்தான் மேலே கண்ட ஆலாபனை.


அதாவது, ஒருவனுக்கு சொர்கத்திலே ஒரு ஸீட் (இடம்) நிச்சயம்ன்னு சொன்னாலும் இரத்தல் தீதாம்; அந்த மேல் உலகமெல்லாம் உனக்கு கிடைக்காதுன்னு சொன்னாலும் வறியவர்களுக்கு உதவுவது நன்றாம். இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க. அப்படி சொல்லிட்டா, அதுக்குதான் இந்த குறள்:


நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று.” --- குறள் 222; அதிகாரம் - ஈகை


நல்லாறு எனினும் கொளல்தீது = நல்லதுக்கு இதுதான் வழின்னு சொன்னாலும் இரத்தல் தீது; மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று = கொடுப்பதால் பரலோகம் போக முடியாதுன்னு சொன்னாலும் கொடுப்பது சிறந்தது


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page