top of page
Search

சொல்லுதல் யார்க்கும் ... 664

02/05/2023 (789)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

செய்வதற்கு முன்னரே சொல்லுவது என்பது அந்தச் செயலுக்கு ஊறு விளைவிக்கும், தடையை ஏற்படுத்தும் என்றால் அதைத் தவிர்த்து கமுக்கமாக செய்து முடிக்க வேண்டும் என்றார். அதாவது, கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக் கொட்கின் எற்றா விழுமம் தரும் என்றர் குறள் 663 இல்.


அப்படியே தொடர்கிறார். முதலிலேயே நாம் செய்ய நினைப்பதைச் சொல்லுவதால் மற்றுமொரு சிக்கல் இருப்பதைத் தெளிவு படுத்துகிறார்.


தம்பி, சொல்லுவது என்பது எல்லோரும் சொல்லாம். அது அனைவருக்குமே எளிதானச் செயல். ஆனால், சொல்லிய வண்ணம் செய்வது என்பது கொஞ்சம் கடினம்தான். கவனம் வைங்க தம்பி என்கிறார்.


முதலில், நீங்கள் ஒரு அரிதான வேலையைச் செய்யப் போகிறீர்கள் என்றால் அதனை வெட்டிச் சாய்க்க, தடுத்து நிறுத்தத் துடிப்பவர்களும் இருப்பார்கள் என்பதை ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.


அது மட்டுமல்ல, ஒரு செயல், நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தொய்வதும் உண்டு என்பதை குறள் 662 இல் எடுத்துச் சொல்லியிருந்தார். ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை என்றார். காண்க 30/04/2023 (787).


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.” --- குறள் 664; அதிகாரம் – வினைத்திட்பம்


சொல்லுதல் யார்க்கும் எளிய = நான் இந்தச் செயலை இவ்வாறாகத்தான் செய்யப் போகிறேன் என்று அடுக்கலாம். அது எல்லோருக்குமே எளிது; யார்க்கும் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் = (ஆனால்) அந்தச் செயலைச் சொல்லியவாறே செய்து முடிப்பது என்பது எல்லோருக்குமே கடினம்தான்.


நான் இந்தச் செயலை இவ்வாறாகத்தான் செய்யப் போகிறேன் என்று அடுக்கலாம். அது எல்லோருக்குமே எளிது. ஆனால், அந்தச் செயலைச் சொல்லியவாறே செய்து முடிப்பது என்பது எல்லோருக்குமே கடினம்தான்.


கவனியுங்கள். யாவர்க்குமே சொல்லிய வண்ணம் செயல் என்பது அரிது. இல்லை, இல்லை நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? சொல்லி அடிப்பதில் நான் கில்லாடி என்றால் கில்லாடிக்குக் கில்லாடி, கில்லி போல வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். சொல்லா அல்லது செயலா என்றால், சொல்லாமல் செய்பவர்தான் அறிவாளி என்கிறார் நம் பேராசான்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page