top of page
Beautiful Nature

தனியே இருந்து ... குறள் 1296

13/03/2022 (380)

நேற்று எனதருமை பேராசிரியப் பெருந்தகை ஒருவரைச் சந்தித்தேன்.

காமத்துப் பாலின் கட்டமைப்பு பற்றி அருமையான செய்திகளைச் சொன்னார்.


அறத்துப் பாலும், பொருட்பாலும் நம் பேராசானே சொன்னபோது காமத்துப்பாலை மட்டும் அவர்களையே பேச விட்டாரே ஏன் என்பது கேள்வி.


அதற்கு ஒரு விளக்கம் சொன்னார்.


அது ஏன் என்றால், அவரே அவனாகவும், அவளாகவும் மாறி மாறி அனுபவித்து எழுதியுள்ளார் என்றார். மிக மிக அருமையாக இருந்தது அந்த விளக்கம்.


அனுபவிச்சுதான் எழுதியிருக்கிறார் நம் பேராசான். இது நிற்க.


நெஞ்சே உன்கூட முடியலையடா சாமி! எங்கூடத்தான் இருக்கேன்னு பேர். எனக்கு எதிராகத்தான் இருக்கே. அவர் செய்யும் குற்றங்களைக் கண்டுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. அதுகூட பரவாயில்லை. அவர் பின்னாடி போகாமலாவது இருக்கலாம் இல்லை. என்னைத்தனியாகவும் விடமாட்டாய். என்னை இப்படிக் கொல்வது நியாயமா?


தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததுஎன் நெஞ்சு.” --- குறள் 1296; அதிகாரம் - நெஞ்சோடு புலத்தல்


என் நெஞ்சு = என் நெஞ்சு; தனியே இருந்து நினைத்தக்கால் =தனியாக நான் இருந்து அவர் செய்யும் கொடுமைகளை நினைக்கும் போது; என்னைத் தினிய இருந்தது = என்னைக் கொல்வதுபோல அது தனியே இருந்தது.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)



ree


 
 
 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page